இந்தியா

வளர்ப்பு நாயின் பிறந்தநாளுக்கு 100 கிலோ கேக் வெட்டி, 5000 பேருக்கு விருந்து வைத்த தொழிலதிபர்

Published On 2022-06-24 03:01 GMT   |   Update On 2022-06-24 03:02 GMT
  • நாய்க்கு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்லவமாக அழைத்து சென்றனர்.
  • வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இருந்தனர்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா துக்காநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா மர்தி. தொழில்அதிபரான இவர், கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் ஆவார். சிவப்பா தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு கிரஸ் என்று அவர் பெயர் சூட்டி இருந்தார். தனது வளர்ப்பு நாய் மீது சிவப்பா, அவரது குடும்பத்தினர் மிகுந்த அன்பு கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று வளர்ப்பு நாய் கிரசுக்கு சிவப்பா பிறந்தநாள் கொண்டாடினார். இதற்காக கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, வளர்ப்பு நாயின் பிறந்தநாளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இருந்தனர். பின்னர் 100 கிலோ எடை கொண்ட கேக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி வளர்ப்பு நாயின் பிறந்தநானை சிவப்பா கொண்டாடினார்.

மேலும் அந்த நாய்க்கு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்லவமாக அழைத்து சென்றனர். அதன்பிறகு நாயின் பிறந்தநாளுக்கு வந்திருந்த கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு உணவு விருந்து வழங்கினார். அவர்களுக்கு கேக்கும் கொடுக்கப்பட்டது.

இதனால் அந்த நாயையும், சிவப்பாவையும் கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான சிவப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவரை நாயுடன் ஒப்பிட்டு ஒருவர் குற்றச்சாட்டு கூறியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக தனது வளர்ப்பு நாயின் பிறந்தநாளை அவர் விமரிசையாக கொண்டாடியதாக கூறப்படுகிறது.

Similar News