இந்தியா

முழு சம்மதத்துடன் உடலுறவு... வயதை சரிபார்க்க தேவையில்லை: மைனர் பலாத்கார வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Published On 2022-08-30 13:26 GMT   |   Update On 2022-08-30 13:26 GMT
  • பாதிக்கப்பட்ட பெண்ணை பிளாக்மெயில் செய்திருந்தால் ஆரம்பத்திலேயே போலீசில் புகார் அளித்திருக்கலாம் என நீதிபதி கருத்து
  • புகார் கொடுத்த பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

புதுடெல்லி:

டெல்லியில் சிறுமியுடன் உறவு வைத்திருந்த இளைஞர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. அத்துடன் நீதிபதி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார் கொடுத்த சிறுமியும் அந்த இளைஞரும் முழு சம்மதத்துடனேயே உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், அந்த சிறுமி 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த சிறுமிக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படியே மொத்தம் மூன்று பிறந்த தேதிகள் உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டிருக்கிறது.


குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தவே பிறந்த தேதிகளை மாற்றி மாற்றித் தருவதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் தரப்பில் வாதிடப்பட்டது. அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். நீதிபதி கூறியதாவது:-

ஒரு நபர் முழு சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபடும்போது ஆவணங்களின் படி பிறந்த தேதியை சரிபார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உடலுறவில் ஈடுபடும்போது ஆதார் கார்டு, பான் கார்டை பார்க்கவோ அல்லது அவரது பள்ளிப் பதிவுகளில் இருந்து பார்டனரின் பிறந்த தேதியை சரிபார்க்கவோ தேவையில்லை.

இந்த வழக்கில், புகார்தாரரின் பிறந்த தேதியைப் பொறுத்தவரை, அவர் மூன்று வெவ்வேறு பிறந்த தேதிகளைக் கொண்டிருப்பது தெரிகிறது. ஆதார் கார்டில் பிறந்த தேதி 01.01.1998 என்றே இருக்கிறது. இதுவே, குற்றஞ்சாட்டப்பட்டவர் மைனருடன் உடலுறவில் ஈடுபடவில்லை என்ற கருத்தை உறுதி செய்கிறது. இந்தச்

சம்பவத்திற்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து பெரும் தொகை சென்றுள்ளது. இதனால் அவர் வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நினைக்க தோன்றுகிறது.

2019-ல் அந்த நபருடன் உறவில் இருந்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தனை காலத்துக்குப் பின்னர் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த நபர் பிளாக்மெயில் செய்திருந்தால், ஆரம்பத்திலேயே போலீசில் புகார் அளித்திருக்கலாம். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது இது, வழக்கில் சிக்க வைக்கும் முயற்சி போலவே தெரிகிறது.

அந்த பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் அதில் இருக்கும் தகவல்கள் குறித்தும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது. பாஸ்போர்ட்டை போலீசாரிடம் ஒப்படைக்கவேண்டும். விசாரணைக்கு அழைக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.

இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

Similar News