இந்தியா
தேவேந்திர பட்னாவிஸ்

மகாவிகாஸ் அகாடி அரசு தாவூத் இப்ராகிமுக்கு அர்ப்பணிப்பு: பட்னாவிஸ் குற்றச்சாட்டு

Published On 2022-03-04 01:57 GMT   |   Update On 2022-03-04 07:50 GMT
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாடி மராட்டிய மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மும்பை :

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை வளாகத்தில் கூறியதாவது:-

மகாவிகாஸ் கூட்டணி தாவூத் இப்ராகிமுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. தாவூத்துடன் நவாப் மாலிக்கிற்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆவணங்கள் உள்ளன. மந்திரி சபையில் இருந்து நவாப் மாலிக்கை நீக்கும் வரை பா.ஜனதா பட்ஜெட் கூட்டத்தொடரை நடைபெற அனுமதிக்காது.

மும்பை மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்த அரசு அதிக கருணை காட்டுகிறது. சிவசேனா ஆட்சியில் உள்ள போதும், மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளுடன் நில விவகாரத்தில் தொடர்பு வைத்திருப்பவர் மீது கணிவாக நடப்பது அதிர்ச்சியை அளித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், " மாநில அரசு தாவூத் இப்ராகிமுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பது மராட்டியத்தில் உள்ள 11 கோடி மக்களை நேரடியாக அவமதிப்பது போன்றதாகும். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் அகாடி மராட்டிய மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Tags:    

Similar News