புஷ்பா சினிமா பாடலுக்கு நடிகை ரோஜா நடனமாடுவது போல் மார்பிங் செய்து வீடியோ வெளியீடு- 3 வாலிபர்கள் கைது
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நடிகை ரோஜா.
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புஷ்பா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ‘ஓ சொல்றியா ஓ ஓ சொல்றியா மாமா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
மர்ம கும்பல் ஒன்று நடிகை ரோஜாவின் உருவத்தை மார்பிங் செய்து இந்த பாடலுக்கு நடிகை ரோஜா நடனம் ஆடுவது போல் மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து நடிகை ரோஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுசம்பந்தமாக ரோஜா நகரி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நடிகை ரோஜா உருவ படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக திருப்பதியை சேர்ந்த சக்கரபாணி, டெல்லி, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.