இந்தியா
இந்து, பௌத்த, சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிப்பு - பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் இந்தியா கருத்து
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பௌத்தம் மற்றும் சீக்கிய மதத்திற்கு எதிரான மதவெறுப்புணர்வுகளுடன் இந்து மதத்திற்கு எதிரான மத வெறுப்புணர்வையும் ஐ.நா.கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய தூதர் திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் திருமூர்த்தி ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:
இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்திற்கு எதிரான மத எதிர்ப்பு மட்டுமே உலகளாவிய பயங்கரவாத உத்தியில் இடம் பிடித்துள்ளது. அண்மைக் காலமாக இந்து எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது கவலைக்குரிய விஷயம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐநா மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் தீவிர அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஐ.நா.வின் பல உறுப்பு நாடுகள், தங்கள் அரசியல் மத மற்றும் பிற உள்நோக்கங்களால் உந்தப்பட்டு, இன மற்றும் இனரீதியாக உந்துதல் கொண்ட வன்முறை தீவிரவாதம், வன்முறை தேசியவாதம், வலதுசாரி தீவிரவாதம் போன்ற வகைகளில் பயங்கரவாதத்தை முத்திரை குத்த முயற்சிக்கின்றன. இந்த போக்கு பல காரணங்களுக்காக ஆபத்தானது. இந்து , பௌத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான மத வெறுப்பை ஐநா கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.