இந்தியா
பாராளுமன்றத்தில் விவாதம் செய்ய எதிர்க்கட்சிகளை அனுமதிப்பதில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காதது ஜனநாயக படுகொலை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
டெல்லி:
மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இன்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவனேஷ் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தன. பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்றத்தில் சட்ட மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்றத்தை இது போன்று நடத்துவது சரியான முறையல்ல. அவைக்கு பிரதமர் வருவதே கிடையாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப எங்களை அனுமதிப்பதில்லை. இது துருதிஷ்டவசமான ஜனநாயக படுகொலை.
எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற மறுப்பது இந்திய மக்களின் குரலை நெறிக்கும் அடையாளம். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அவர்களின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. முக்கிய பிரச்சனைகளை பேச நாடாளுமன்றத்தில் எங்களை அனுமதிப்பதில்லை.
ஒரு அமைச்சர் விவசாயிகளை கொன்றிருக்கிறார். பிரதமருக்கும் இது தெரியும். உண்மை என்னவென்றால் இரண்டு, மூன்று முதலீட்டாளர்களே விவசாயிகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் விவசாயிகளின் வருமானத்தை திருட நினைக்கிறார்கள். 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் அவர்களே காரணம். பிரதமரும், அவைத் தலைவரும் அதை நிறைவேற்றினர்.
இவ்வாறு தனது பேட்டியின்போது ராகுல்காந்தி குறிப்பிட்டார். இந்த பேட்டியின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்க்கே உடன் இருந்தார்.