செய்திகள்
கடவுள் ராமர், சஞ்சய் நிஷாத்

கடவுள் ராமர் மன்னர் தசரதன் மகன் அல்ல: பா.ஜனதா கூட்டணி கட்சித் தலைவர் பேச்சால் சர்ச்சை

Published On 2021-11-08 10:38 GMT   |   Update On 2021-11-08 12:19 GMT
கடவுள் ராமருக்கு அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அவரின் பிறப்பிடம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்கான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவர் ராமர். வட இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமர் பிறந்த அயோத்தியில் பா.ஜனதா அரசு பிரமாண்ட கோவில் கட்டி வருகிறது.

இதற்கிடையே ராமர் பிறந்த இடம் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகியுள்ளன. நேபாள முன்னாள் பிரதர் கே.பி. சர்மா ‘‘ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம்’’ எனத் தெரிவித்திருந்தார்.  மேலும், கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல எனத் தெரிவித்திருந்தார். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

பின்னர், நேபாள பிரதமர் கருத்து குறித்து விளக்கம் தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘‘ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கே.பி. சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு பேசவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறவில்லை’’ எனத் தெரிவித்திருந்தது. அதன்படி சர்ச்சை ஓய்ந்தது.

இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், கடவுள் ராமர் மன்னர் தசரதன் மகன் அல்ல. நிஷாத் குடும்பத்தில் பிறந்தவர் எனத் தெரிவித்துள்ளார். சஞ்சய் நிஷாத்தின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் அன்ஷு அவாஸ்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதாவின் கொள்கையை நிஷாந்த் கட்சி தலைவர் பிரசாரம் செய்கிறார். தற்போது ராமர் கோவில் குறித்து பேசுகிறார். ஆனால், பா.ஜனதா அலகாபாத்தில் நிஷாத் மக்களின் படகை (Boat) இடிக்கும்போது நிஷாத் மவுனமாக இருந்தார். உத்தர பிரதேச மக்கள் மற்றும் சொந்த சமுதாயத்தில் உள்ளவர்களின் முக்கிய பிரச்சினையில் இருந்து பின்வாங்குகிறார்’’ என்றார்.



ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி ‘‘டி.என்.ஏ. நிபுணரான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நிஷாத் கட்சி தலைவர் கருத்து குறித்து விளக்க வேண்டும். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்கள் இதுகுறித்து பேச வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News