செய்திகள்
அரசு அதிகாரியின் கலை நயத்துடன் கூடிய கையெழுத்து

அரசு அதிகாரியின் கலைநயத்துடன் கூடிய கையெழுத்து- சமூக வலைதளங்களில் வைரலானது

Published On 2021-10-29 05:09 GMT   |   Update On 2021-10-29 05:09 GMT
அரசு அதிகாரியின் ஓவிய கையெழுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியை அடுத்த குப்பாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் எம்.கே.ஜெயன். வட்டார வளர்ச்சி அதிகாரியான இவர் அண்மையில் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்றலாகி வயநாட்டில் உள்ள மானந்தவாடியில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் அவரது ஓவிய கையெழுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசு அதிகாரி ஒருவரின் போலி கையெழுத்தை உருவாக்க முடியாது என்றால் அது எம்.கே.ஜெயன் கையெழுத்தாக மட்டுமே இருக்கும். அந்த அளவிற்கு பறக்கும் பச்சை கிளி போன்ற ஓவியத்துடன் தனது கையெழுத்தை முடித்து இருப்பார்.

தனது கையெழுத்து தோன்றியது குறித்து ஜெயன் கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்த நேரம். ஒருநாள் மாணவ- மாணவிகள் அனைவரையும் அழைத்த வகுப்பு ஆசிரியர் அவரவர் தங்களது கையெழுத்துகளை வழக்கம் போல் கோடும் புள்ளியும் இல்லாமல் கலை நயத்துடன் எழுதி மறுநாள் பள்ளிக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என கூறினார்.

ஆசிரியரின் கட்டளையை ஏற்று இரவு கண் விழித்து நீண்ட நேரம் ஓவியமாக வரையப்பட்டது தான் இந்த கையொப்பம். இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகு எனது கையெழுத்து பிரபலமாகும் என்று நினைக்கவில்லை என்றார்.


Tags:    

Similar News