செய்திகள்
குழந்தை

‘யூடியூப்’ பார்த்து குழந்தை பெற்றெடுத்த பிளஸ்-2 மாணவி: 3 நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த பெற்றோர்

Published On 2021-10-28 04:59 GMT   |   Update On 2021-10-28 06:25 GMT
யூ டியூப் பார்த்து பிளஸ்-2 மாணவி ஒருவர் தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.

இந்த மாணவியின் தந்தை அருகில் உள்ள ஊரில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது.

மாணவியின் வீடு அருகே 21 வயது வாலிபர் வசித்து வருகிறார். அவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். அப்போது வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை கேட்டு மாணவி, அந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார்.

மாணவி, இத்தகவலை பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விட்டார். அதே நேரம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் கூறியுள்ளார். பெற்றோரும் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிகளில் மாணவி கர்ப்பமாக இருப்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் மாணவி நிறைமாத கர்ப்பிணி ஆனார். கடந்த 20-ந்தேதி மாணவிக்கு பிரசவ வலி வந்தது. என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது பற்றி யூ டியூப்பில் பார்த்தார்.



பின்னர் அவர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை உட்பக்கமாக பூட்டி கொண்டார். அங்கு யூ டியூப்பில் பார்த்த தகவல்களின் அடிப்படையில் அவரே தனக்குதானே பிரசவம் பார்த்து கொண்டார்.

இதில் அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்பு மாணவியே தனது தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை எடுத்து கொண்டார்.

பிரசவம் முடிந்த பின்பு வீட்டில் வழக்கம் போல் நடமாடிய மாணவி அடிக்கடி வீட்டின் மேல் மாடிக்கு செல்வதை கண்ட பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அப்போது அந்த அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பெற்றோர், மாணவியின் அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு அழகிய குழந்தை இருப்பதை கண்டனர்.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியிடம் அதட்டி கேட்டபின்னர், அவர் பக்கத்து வீட்டு வாலிபரால் கர்ப்பம் ஆனதையும், அதன்பின்பு தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டதையும் கூறி அழுதார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவியும், அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியை கர்ப்பம் ஆக்கிய வாலிபரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

யூ டியூப் பார்த்து பிளஸ்-2 மாணவி ஒருவர் தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News