செய்திகள்
2023 கர்நாடக சட்டசபை தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்: குமாரசாமி
மக்கள் தன்னிச்சையாக அரசை நடத்துவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் ஆதரவு அளித்தது. பின்னர், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்ய குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
இந்த நிலையில் 2023 சட்டசபை தேர்தல்தான் தன்னுடைய கடைசி தேர்தல் என குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் குமாரசாமி கூறுகையில் ‘‘நான் இரண்டு முறை மக்கள் ஆசீர்வாதத்தால் முதலமைச்சராகியுள்ளேன். நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் 2023 சட்டசபை தேர்தல்தான் என முடிவு செய்துள்ளேன்.
இந்த முடிவை நான் அதிகாரத்திற்கு வருவதற்காகவோ, முதலமைச்சராகவோ எடுக்கவில்லை. கடவுள் ஆசீர்வாதத்துடன் இரண்டு முறை முதல்வராகியுள்ளேன். இருந்தாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் வகையில் தனி மெஜாரிட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மெஜாரிட்டி கிடைத்தால் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய முடியும். உங்களுடைய ஆசீர்வாதத்தை கேட்கிறேன்’’ என்றார்.