செய்திகள்
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி வருகிற 7-ந்தேதி எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்கிறார்

Published On 2021-10-04 13:57 GMT   |   Update On 2021-10-04 13:57 GMT
பவானிபூர் இடைத்தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி வருகிற 7-ந்தேதி எம்.எல்.ஏ.-வாக பதவி ஏற்கிறார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. என்றாலும், மம்தா பானர்ஜி நந்தி கிராமம் தொகுதியில் சுவேந்து அதிகாரிக்கு எதிராக தோல்வியடைந்தார். இருந்தாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனால் ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் பவானிபூர் இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா வேட்பாளர் பிரியங்காவை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோற்கடித்தார்.

இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி மம்தா பானர்ஜி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என மேற்கு வங்காள மந்திரி பார்தா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News