செய்திகள்
மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அரசு பேருந்து: 3 பேர் பலி
மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதில் நடத்துனர் உயிரிழந்த நிலையில், டிரைவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மாரத்வாடா மற்றும் விதர்பாவின் சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக காட்சி அளித்தது. நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற இடத்திற்கு மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர், நடத்துனர் தவிர நான்கு பயணிகள் இருந்தனர்.
பேருந்து உமர்கெட் தாலுகாவில் உள்ள தஹாகயோன் பாலத்தில் செல்லும்போது வெள்ளத்தில் பஸ் இழுத்துச் செல்லப்பட்டு கவிழ்ந்தது. இதில் ஆறு பேரும் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஆறு பேரில் ஷரத் ஃபுல்மாலி (27), சுப்ரமணியன் டோக்லா (48) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனால் நடத்துனர் உள்ளிட்ட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் டிரைவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.