செய்திகள்
ஸ்புட்னிக் லைட்

ஒரு டோஸ் மட்டுமே கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’-ஐ இந்தியா பெற வாய்ப்பு: அடுத்த மாதம் பேச்சுவார்த்தை

Published On 2021-05-14 13:13 GMT   |   Update On 2021-05-14 13:13 GMT
ஸ்புட்னிக்-வி இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் குறித்து ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் ரஷிய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அவசர தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்தது. 
முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்தடைந்தன. மேலும் பல லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளன. அதேபோல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உள்ளூர் தயாரிப்பு பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது டோஸ் 21 நாட்கள் கழித்து செலுத்தலாம். இன்று இந்தியாவில் முதன்முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 35 மையங்களில் விரைவில் செலுத்தப்பட இருக்கிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியுடன் இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. பைசர், மாடர்னாவிற்கு அடுத்தப்படியாக 91.6 சதவீத செயல்திறன் கொண்டதாக ஸ்புட்னிக்-வி உள்ளது.



இதற்கிடையே ஒரு டோஸ் மட்டுமே கொண்ட ஸ்புட்னிக் லைட் என்ற தடுப்பூசி ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஷிய அரசும் அங்கீகாரம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியையும் இந்தியாவுக்கு கொண்டு வர டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறவனம் மத்திய அரசு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதன்பின் உடனடியாக திட்டத்தை தொடங்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருப்பதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News