செய்திகள்
ஆந்திராவில் நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
எனவே, ஆந்திர மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் 14 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு காலத்தில் இருப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். மதியம் 12 மணிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதால், அவசரகால சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின்போது, முதல்வர் இதனை அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.