செய்திகள்
லஸ்சி குடித்ததால் வயிற்று வலி, வாந்தி... 100 பேர் மருத்துவமனையில் அனுமதி
பல்வேறு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள குர்தி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் லஸ்ஸி வாங்கி குடித்துள்ளனர். வீடு திரும்பியதும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்பட சுமார் 100 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 20 பேரின் நிலை மோசமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பொதுமக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் பொதுசுகாதார அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.