செய்திகள்
கடுமையாக தாக்கப்பட்ட சிறுவன் - பகீர் தகவலுடன் வைரலாகும் புகைப்படம்
கடும் காயங்களுடன் நிற்கும் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நபர் ஒருவர் சிறுவனை தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலானது. இந்த சம்பவம், அந்த சிறுவன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் என்றும் அவன் கோவிலில் தண்ணீர் குடித்ததால் இந்து மதத்தை சேர்ந்த நபர் சிறுவனை தாக்கியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், உடல் முழுக்க காயமடைந்த சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. `ஆசிப், தாகமாக இருந்தால் மசூதி, சர்ச், குருத்வாரா அல்லது ஓட்டலுக்கு சென்று தண்ணீர் குடித்திருக்கலாம்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்படுகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அந்த புகைப்படம் 2020, அக்டோபர் 9 ஆம் தேதி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த பதிவில், மகன் சரியாக படிக்காததால் தந்தை சிறுவனை கடுமையாக தாக்கினார் எனும் தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய செய்தி தொகுப்புகளும் இணையத்தில் கிடைத்தன. உண்மையில், தந்தை தன் மகனை கடுமையாக தாக்கியிருக்கிறார். ஆனால் அவர் எதற்கு அவ்வாறு செய்தார் என்ற விவரம் கிடைக்கப்பெறவில்லை.
அந்த வகையில், கோவிலில் தண்ணீர் குடித்ததற்காக சிறுவன் தாக்கப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது. மேலும் அந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.