செய்திகள்
சட்டசபையில் அமளி... சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அனைவரும் சஸ்பெண்ட்
பஞ்சாப் சட்டசபைக் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.
சண்டிகர்:
பஞ்சாப் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் அமரீந்தர் சிங் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு வந்துவிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் 2 முறை அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. சிரோமணி அகாலி தளம் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என சபாநாயகர் ராணா கே.பி.சிங் கேட்டுக்கொண்டார். ஆனாலும் உறுப்பினர்கள் அமைதி காக்கவில்லை. இதையடுத்து சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து அவர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.