செய்திகள்
கோவிந்த் கார்ஜோள்

பாஜக ஆட்சி இருக்கும் வரை முதல்-மந்திரியாக எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார்: கோவிந்த் கார்ஜோள்

Published On 2021-02-15 01:51 GMT   |   Update On 2021-02-15 01:51 GMT
பா.ஜனதா ஆட்சி இருக்கும் வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார் என்று துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

விஜயாப்புராவில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று காலையில் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் பார்வையிட்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விஜயாப்புராவில் விமான நிலையம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் விமான நிலையம் அமைவதில் எனக்கு விருப்பம் இல்லை. முலவாடா பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அப்பகுதியில் எனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாகவும், அதனால் தான் அங்கு விமான நிலையம் அமைக்க நான் கூறுவதாகவும் சிலர் குற்றச்சாட்டு கூறினார்கள். அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

முலவாடா பகுதியில் அரசுக்கு சொந்தமான 2,500 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கு விமான நிலையம் அமைத்திருந்தால், அனைத்து வசதிகளும் கிடைத்திருக்கும். போதுமான இடவசதியும் விமான நிலையத்திற்கு கிடைத்திருக்கும். இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கப்படும்.

முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகிறார்கள். முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதுதொடர்பாக இதுவரை எந்த விதமான ஆலோசனைகளும் நடைபெறவில்லை. எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட இருப்பதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

பா.ஜனதா ஆட்சி இருக்கும் வரை முதல்-மந்திரி பதவியில் எடியூரப்பா தொடர்ந்து நீடிப்பார். அவரது தலைமையிலேயே பா.ஜனதா ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News