செய்திகள்
மேற்கு வங்கத்தில் பந்த் -இடதுசாரி கட்சியினர் சாலை மறியல்
சட்டசபை நோக்கி நடந்த பேரணியின்போது இடதுசாரி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தியும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சட்டசபை நோக்கி நேற்று பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமானோர் காயமடைந்தனர். போராட்டக்குழுவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் தடியடி நடத்தியதைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இடதுசாரி கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்திற்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பு எடுக்காமல் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராதவர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.