செய்திகள்
டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோர் மாயம் - விவசாயிகள் அதிர்ச்சி தகவல்
தலைநகர் டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் கடந்த 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் வன்முறை மூண்டது.
இந்த பேரணியை தொடர்ந்து மீண்டும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த பேரணி மற்றும் வன்முறை சம்பவத்துக்கு பின் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள விவசாயிகள், மாயமானோர் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து, அது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைப்போல மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு செல்போன் எண் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டக்களங்களில் பொதுமக்களை அனுமதிக்காத போலீசாரின் செயலுக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை நிறுத்துவதற்கான சதி என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.