செய்திகள்
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாகவும், அவர் துப்பாக்கிச்சூட்டில்தான் பலியானார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்தனர். இன்று காலையில் இருந்து டெல்லி மாநிலத்தின் மூன்று எல்லைகளில் இருந்து பேரணி தொடங்கியது.
ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்த பின்னர், செங்கோட்டையை முற்றுகையிடும் வகையில் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
அப்போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டை கோபுரத்தில் ஏறி விவசாயிகள் சங்க கொடியை நாட்டினர்.
இதற்கிடையில் பேரணியின்போது ஒரு விவசாயிகள் உயிரிழந்துள்ளார். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதேவேளையில் டிராக்டரை கொண்டு தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது டிராக்டர் கவிழ்ந்துதான் அவர் உயிரிழந்தார் என போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.