செய்திகள்
சபரிமலை

மகரஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

Published On 2021-01-12 06:55 GMT   |   Update On 2021-01-12 06:55 GMT
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது.

பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனம் நாளை மறுநாள் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அன்று பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.

இப்போது கொரோனா பிரச்சினை காரணமாக தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மகர ஜோதி தரிசனத்தை பார்க்கவும் சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்து உள்ளார்.

மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில் 50 பக்தர்களுக்கே திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News