செய்திகள்
பிரதமரை அவதூறாக பேசிய பைலட்... வேலையில் இருந்து நீக்கிய விமான நிறுவனம்
பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்து தெரிவித்த பைலட்டை விமான நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
புதுடெல்லி:
கோஏர் விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மூத்த பைலட் ஒருவர், கடந்த வியாழக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்தை பதிவு செய்திருந்தார். பிரதமர் பெயரை குறிப்பிடாமல் அவர் இந்த கருத்தை பதிவு செய்திருந்தார். இது வைரலாக பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கோஏர் நிறுவனம், அந்த பைலட்டை வேலையில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இதற்கிடையே பைலட் தனது டுவிட்டரில் போட்ட சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியதுடன், மன்னிப்பும் கோரினார்.
‘எனது கருத்துக்கள் யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் வெளியிட்ட பதிவு எனது தனிப்பட்ட கருத்துக்கள், கோஏர் நிறுவனத்திற்கும் எனது கருத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என பைலட் கூறி உள்ளார்.
இதுபோன்ற விஷயங்களில், கோஏர் நிறுவனம் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டது என்றும், ஊழியர்கள் அனைவரும் நிறுவன விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பைலட்டை வேலையில் இருந்து நீக்கியதைக் கண்டித்து டுவிட்டரில் பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.