செய்திகள்
திருப்பதி

திருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களில் மரம் வளர்த்து பசுமையாக்க புதிய திட்டம்

Published On 2021-01-08 08:39 GMT   |   Update On 2021-01-08 08:39 GMT
பக்தர்களை கவரும் வகையில் அதிகப்படியான அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை செயல்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி:

திருப்பதியில் கொரோனா ஊரடங்கு தளர்வு, வைகுண்ட ஏகாதசி தரிசனத்தை தொடர்ந்து தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருப்பதி அலிபிரி அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சாலை அமைக்கப்பட்டுள்ளது. மலை மீது ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு என 2 பிரத்யேக சாலைகள் இருக்கின்றன.

மேலும் நடைபயணமாக மலையேறும் வகையில் படிக்கட்டுகள், சமதளப் பரப்புகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான பணிகள் குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் திருமலையில் நடந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அலிபிரி நடைபாதை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வரும் ஜூன் முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வகையில் செயல்படுமாறு தலைமை பொறியாளர் ஸ்ரீரமேஷ் ரெட்டிக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது வரை அலிபிரியில் 300 மீட்டர் தூரம் வரையிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும் திருமலையில் உள்ள தங்கும் அறைகளில் இருக்கும் பழுதுகள் சரிசெய்யப்பட வேண்டும். எஸ்.வி மியூசியத்தில் பக்திமயமான சூழலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அங்கு கோவிலின் வடிவமைப்பு, சாமி சிலைகள், பிரத்யேக பொருட்கள் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து திருமலையின் பசுமையான பகுதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வன அதிகாரி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் தோட்ட மேற்பார்வையாளர் ஸ்ரீ ஸ்ரீனிவாசலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.

படா கங்கம்மா கோவிலின் அருகேவுள்ள காலியிடங்களில் தோட்டங்கள் அமைக்க வேண்டும். திருமலையின் பாறை சூழ்ந்த பகுதிகளை கண்டறிந்து பைலட் திட்டத்தின் மூலம் பசுமையாக்க வேண்டும். சாலைகளில் இருக்கும் டிவைடர்கள், நடுவிலுள்ள பகுதிகள் உள்ளிட்டவற்றில் சிறிய தோட்டங்கள் அமைக்க வேண்டும்.

பக்தர்களை கவரும் வகையில் அதிகப்படியான அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை செயல்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News