செய்திகள்
விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

டெல்லி எல்லையில் விவசாயிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Published On 2020-12-05 10:43 GMT   |   Update On 2020-12-05 10:43 GMT
டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
 
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் கடந்தமாதம் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். 

ஆனால், அரியானா - டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 10-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச-டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், போராட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய  குழுக்கள் இடையே ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வேளாண் சட்டத்தில் திறுத்தம் கொண்டுவர மத்திய அரசு சம்பதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவும் மத்திய அரசு சம்பதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லி - அரியானா எல்லை போன்று டெல்லி - உத்தரபிரதேச எல்லையிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது டெல்லி-உத்தரபிரதேச எல்லையான கிரேட்டர் நொய்டா பகுதியில் யமுனா தேசிய நெடுச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தற்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போலீசார் வைத்துள்ள தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்டனர். 

அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.  
Tags:    

Similar News