செய்திகள்
நிதிஷ் - தேஜஸ்வி

திருப்பங்கள் நிறைந்த பீகார் தேர்தல் - 3 மணி அளவிலான முன்னிலை நிலவரம் வெளியீடு

Published On 2020-11-10 10:14 GMT   |   Update On 2020-11-10 10:18 GMT
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 3 மணி அளவிலான நிலவரம் வெளியாகியுள்ளது.
பாட்னா:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வழக்கமாக வாக்குஎண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களில் வெற்றியாளர்களின் முடிவுகள் பெரும்பாலும் தெரிந்துவிடும். 

ஆனால், கொரோனா காரணமாக வாக்கு எண்ணிக்கையில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் பீகார் தேர்தல் முன்னனி நிலவரம் நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடுகிறது. 

வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மாலை 3 மணி 
நிலவரப்படி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முன்னனி நிலவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான கூட்டணி 128 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், அசாதுதீன் ஒவாய்சியின் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி 2 இடத்திலும், சிரங் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 2  இடங்களிலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.     

முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில் பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், இன்னும் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் எண்ணப்படாததால் யார் வெற்றிபெறுவது என்பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News