செய்திகள்
ஏக்நாத் கட்சே

காரின் டயர் வெடித்து விபத்து - முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே உயிர் தப்பினார்

Published On 2020-11-02 23:51 GMT   |   Update On 2020-11-02 23:51 GMT
மகாராஷ்டிராவில் காரின் டயர் வெடித்த விபத்தில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலைய கட்டிட திறப்புவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கலந்துகொண்டு போலீஸ் நிலைய கட்டிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரியும், பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தவருமான ஏக்நாத் கட்சேயும் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் அவர் தனது காரில் ஜல்காவ் நோக்கி சென்றுகொண்டு இருந்தார். அப்போது வழியில் அவரது காரின் டயர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது.

இருப்பினும் சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காரில் இருந்த ஏக்நாத் கட்சே உள்பட அனைவரும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஏக்நாத் கட்சேயின் கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Tags:    

Similar News