செய்திகள்
விபத்தில் சிக்கிய லாரியை படத்தில் காணலாம்.

மதுபானம் கொண்டு சென்ற லாரி விபத்தில் சிக்கியது- சாலையில் ஆறாக ஓடிய ‘பீர்’

Published On 2020-10-21 02:38 GMT   |   Update On 2020-10-21 02:38 GMT
ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா அருகே மதுபானம் கொண்டு சென்ற லாரி விபத்தில் சிக்கியது. இதனால் சாலையில் ஆறாக ஓடிய பீரை மது பிரியர்கள் வடிகட்டி பிடித்து சென்றனர்.
ஹாசன்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து ‘பீர்’ உள்ளிட்ட மதுபான வகைகள் ஒரு லாரியில் நேற்று கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரியில் சுமார் 900 பாக்சுகளில் ‘பீர்’ உள்ளிட்ட மதுபானங்கள் இருந்தன. அந்த லாரி ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா அருகே சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் சுமார் 100 பாக்சுகளில் இருந்த ‘பீர்’ பாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதனால் அந்த சாலையில் ‘பீர்’ ஆறாக ஓடியது. இதனை பார்த்த மது பிரியர்கள் உடனடியாக அங்கு வந்து, சாலையில் தேங்கி கிடந்த பீரை வடிகட்டி பிடித்து சென்றனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இதுகுறித்து ஒலேநரசிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News