செய்திகள்
கோப்புப்படம்

கேரள தங்க கடத்தல் வழக்கில் 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

Published On 2020-10-15 21:58 GMT   |   Update On 2020-10-15 21:58 GMT
கேரள தங்க கடத்தல் வழக்கில் 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்
திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தங்க கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது, கைதானவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கு என்.ஐ.ஏ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி, 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சிறப்பு கோர்ட்டு அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சாரித் ஆகியோர் தங்கள் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
Tags:    

Similar News