செய்திகள்
மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

அரசு பணிகளுக்கான நேர்காணல் 23 மாநிலங்களில் ரத்து - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்

Published On 2020-10-10 19:33 GMT   |   Update On 2020-10-10 19:33 GMT
நாட்டின் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களும் கீழ்நிலை அரசு பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அரசு கீழ்நிலை பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கு நேர்காணல் நடத்தும் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த பணிகளில் நேர்காணல் முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அல்லாத குரூப் பி, சி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு 2016 ஜனவரி 1 முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்க கூடிய அரசு பணியிடங்களை அடையாளம் கண்டு தெரிவிக்க மாநில முதல்-மந்திரிகளுக்கும் கடிதம் எழுதினார்.

உடனடியாக மராட்டியம் மற்றும் குஜராத் மாநில அரசுகள் இந்த நடைமுறையை உடனடியாக செயல்படுத்தின. ஆனால் மற்ற மாநிலங்கள் தயக்கம் காட்டின.

இந்த நிலையில், நேற்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களும் கீழ்நிலை அரசு பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News