செய்திகள்
அடல் நெடுச்சாலை சுரங்கபாதையில் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு

அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக ராணுவ வாகனங்கள் முதல் பயணம்

Published On 2020-10-07 20:50 GMT   |   Update On 2020-10-08 02:41 GMT
அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக இந்திய ராணுவத்தினின் வாகனங்கள் முதல்முறையாக நேற்று பயணம் மேற்கொண்டன.
மணாலி:

உலகின் மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை இமாச்சலபிரதேசத்தில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ம் தேதி திறந்து வைத்தார்.

இமாச்சலபிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக் யூனியன்பிரதேசத்தின் லே பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த அடல் சுரங்கப்பாதை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மூலம் மணாலி-லே இடையேயான பயண தூரம் 46 கிலோ மீட்டர் குறைகிறது. இது ஏற்கனவே உள்ள பயண நேரத்தில் 5 மணி நேரத்தை குறைக்கிறது. 

ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த சாலை பனிக்காலத்தில் 6 மாதங்களுக்கு மூடப்பட்டு இருக்கும். இதனால், லே மற்றும் இமாச்சல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு படையினருக்கும், அவர்களின் போக்குவரத்திற்கும் சற்று சிரமத்தை ஏற்படுத்திவந்தது.

ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆண்டு முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் என்பதால் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்து மற்றும் ஆயுதங்களை எல்லைக்கு எளிதில் கொண்டு செல்ல அதிக நேரம் தேவைப்படாது. இதனால் எல்லை பாதுகாப்பில் அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை செயல்படத்தொடங்கி 5 நாட்கள் ஆன நிலையில் இந்திய பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் நேற்று இந்த சுரங்கப்பாதை வழியாக தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. 

இமாச்சலின் மணாலியில் இருந்து லடாக்கின் லே -விற்கு அடல் சுரங்கப்பாதை வழியாக ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். அந்த வாகனங்களில் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.  
Tags:    

Similar News