செய்திகள்
கங்கனா ரனாவத் பெறும்போது ஹத்ராஸ் குடும்பம் ஏன் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெறக்கூடாது? - பீம் ஆர்மி தலைவர் கேள்வி
நடிகை கங்கனா ரானாவத் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெறும்போது ஹத்ராஸ் குடும்பம் ஏன் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெறக்கூடாது? என பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு மற்றும் காவல்த்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ஊடகத்துறையினரும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் சந்திக்க உத்தரபிரதேச காவல்துறையினர் முதலில் அனுமதி மறுத்தனர்.
பின்னர், பல்வேறு தரப்பின் அழுத்தத்தையடுத்து, ஹத்ராஸ் குடும்பத்தினரை சந்திக்க ஊடகத்துறையினருக்கும், அரசியல் கட்சியினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர்,’ பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன் அல்லது இந்த குடும்பத்தினரை எனது வீட்டிற்கு அழைத்துச்செல்கிறேன். என்னென்றால், இந்த குடும்பத்தினருக்கு இங்கு பாதுகாப்பு இல்லை.
நடிகை கங்கனா ரனாவத் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு பெறும்போது ஹத்ராஸ் குடும்பம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ஏன் பெறக்கூடாது?. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்’ என்றார்.