செய்திகள்
ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தை உ.பி. முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் மிரட்டுகிறார் - ராகுல் குற்றச்சாட்டு
ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் மிரட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
சண்டிகர்:
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் உத்தரபிரதேச அரசு மற்றும் காவல்த்துறை குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சந்திக்க முற்பட்டனர்.
ஆனால், தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல்,பிரியங்கா சந்திக்கவிடாமல் உ.பி. போலீசார் தடுத்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்பினரின் அழுத்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணி நடத்துகிறார்.
முதல் நாளான இன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேரணி தொடங்கியது. பேரணி துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசிய ராகுல் காந்தி, ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உத்தரபிரதேச முதல்மந்திரி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ராகுல் பேசியதாவது:-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நான் சந்திதேன். இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது வீட்டிலேயே பூட்டப்பட்டனர். மாவட்ட மாஜிஸ்திரேட்டும், உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தும் அந்த குடும்பத்தை மிரட்டுகின்றனர்.
இது தான் இந்தியாவின் தற்போதைய நிலைமையாக உள்ளது. குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
என்றார்.