செய்திகள்
பீகாரில் லாலு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சுட்டுக்கொலை
பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செயலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான சக்தி மாலிக், இன்று காலை பூர்ணியா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சக்தி மாலிக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுபற்றி டிஎஸ்பி ஆனந்த் பாண்டே கூறுகையில், ‘சக்தி மாலிக் இன்று காலை தனது வீட்டில் இருந்தபோது, 3 நபர்கள் வந்து சுட்டுக் கொன்றுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது’ என்றார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.