செய்திகள்
நிரவ்மோடி, அமிரா மோடி

பிரபல வைர வியாபாரி நிரவ்மோடியின் மனைவிக்கு இண்டர்போல் நோட்டீஸ்

Published On 2020-08-25 18:11 GMT   |   Update On 2020-08-25 18:11 GMT
பிரபல வைர வியாபாரி நிரவ்மோடியின் மனைவிக்கு சர்வதேச காவல்துறை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
லண்டன்:

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி(48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அவரின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குநராகப் பணியாற்றிய அவரது மனைவி அமிரா மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அமலாக்கத்துறை, இண்டர்போலைக் கோரியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இண்டர்போல் அமிரா மோடிக்கு எதிராக சிவப்பு கார்னர் நோட்டீஸை வெளியிட்டது.  அமலாக்க இயக்குநரகத்தின் வேண்டுகோளின் பேரில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிரவ் மோடியின் சகோதரர் நேஹால் மோடி மற்றும் சகோதரி பூர்வி மோடி ஆகியோருக்கு எதிராக இதேபோன்று இன்டர்போல் முன்பு நோட்டீஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்காவில் நிரவ் மோடியின் சொத்துகளை ஏலம் விட்டு ரூ.24 கோடியை பஞ்சப் நேஷ்னல் வங்கி மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News