செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கூடுகிறது

Published On 2020-08-25 15:11 GMT   |   Update On 2020-08-25 16:02 GMT
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 14-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடத்தப்படும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு இன்னும் கூட்டத்தொடரை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடர் கூட கடந்த மே மாதம் 23-ம் தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இரு தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால், மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்த தொடர் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி கூடுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News