செய்திகள்
கட்டிட விபத்து நடந்த பகுதி

மகாராஷ்டிர கட்டிட விபத்து - இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60 பேர் மீட்பு

Published On 2020-08-25 01:26 GMT   |   Update On 2020-08-25 01:26 GMT
மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 25 முதல் 30 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தின் மகாட் என்ற பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

47 குடியிருப்புகளை கொண்டிருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கட்டிடத்தில் மொத்தம் எத்தனை பேர் வசித்து வந்தனர் என்ற உறுதியான தகவலில் வெளியாகவில்லை .

கட்டிடம் இடிந்து விழுவதற்கு சிலமணிநேரத்திற்கு முன்னர் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.

ஆனால், கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தபோது அந்த இடிபாடுகளுக்குள் 70-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கட்டிட விபத்து காரணமாக இடிபாடுகளுக்குள் சுமார் 100 பேர் வரை சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களில் தற்போதுவரை 60 பேர் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிர மந்திரி அதித்தி தாக்கரே இன்று தெரிவித்துள்ளார். 



மீட்கப்பட்டவர்களில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிக்ச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் 25 முதல் 30 பேர் வரை இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என மந்திரி அதித்தி தெரிவித்துள்ளார். 

கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு நியமணம் செய்யப்பட்டுள்ளதாகவும் மந்திரி அதித்தி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News