செய்திகள்
கேரளா ஐகோர்ட்

கேரளாவில் போராட்டம் நடத்த ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு

Published On 2020-08-03 12:45 GMT   |   Update On 2020-08-03 12:45 GMT
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேரளத்தில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தடை நீட்டித்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களாக கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதையடுத்து கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூலை 15-ம் தேதி, கேரளத்தில் ஜூலை 31-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தொற்றுநோய் மற்றும் மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு கேரளாவில் பொது இடங்களில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் வருகின்ற ஆகஸ்ட 31 ஆம் தேதி வரை நீட்டித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News