செய்திகள்
ரபோல் போர் விமானங்கள்

7 மணி நேர தொடர் பயணத்திற்க்கு பின் இந்தியா வரும் வழியில் அமீரகத்தில் தரையிறங்கியது ரபேல் போர் விமானங்கள்

Published On 2020-07-27 15:16 GMT   |   Update On 2020-07-27 15:16 GMT
பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்களும் 7 மணி நேர பயணத்திற்கு பின் இந்தியா வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது தரையிறங்கியுள்ளது.
துபாய்:

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும்.

இந்த ஒப்பந்தத்தின் முதல் படியாக கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய ரபேல் போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படை வசம் பிரான்சு அரசாங்கம் ஒப்படைத்துள்ளது. இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், மே மாதம் வர விருந்த ரஃபேல் விமானங்களின் வருகை, கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், இன்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

பிரான்சில் இருந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து ரபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இந்த பயணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் மட்டும் விமானம் தரையிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. விமானிகளின் இடைவெளிக்காக இந்த தரையிறக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்படிருந்தது.

இந்நிலையில், 7 மணி நேரத்திற்கும் அதிகமான தொடர் பயணத்திற்கு பின்னர் இரவு 7.30 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் டஹ்ரா விமானப்படை தளத்தில் 5 ரபேல் போர் விமானங்களும் பத்திரமாக தரையிடக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தனது பயணத்தை தொடங்கும் ரபேல் விமானங்கள் அடுத்த நிறுத்தமாக நாளை மறுநாள் அரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை வந்தடைகிறது.

இந்த பயணத்தின் போது நடு வானிலேயே எரிபொருள் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவசரநிலையை கருத்தில் கொண்டு 5 போர் விமானங்களும் உடனடியாக விமானப்படையின் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News