செய்திகள்
பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 50000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு- பிரதமர் அலுவலகம் தகவல்
பிஎம் கேர்ஸ் நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிறப்பு பிரிவுகளுக்கு சப்ளை செய்வதற்காக, பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50000 வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவுக்கு 275, டெல்லிக்கு 275, பீகாருக்கு 100, கர்நாடகாவுக்கு 90 மற்றும் ராஜஸ்தானுக்கு 75 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜூன் இறுதிக்குள் கூடுதலாக 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் டெலிவரி செய்யப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக மாநிலங்களுக்கு 1000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு 83 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.