செய்திகள்
அம்பன் புயலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதி - மம்தா பானர்ஜி
அம்பன் புயலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
தெற்கு வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.
புயல் பாதிப்பை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நடத்தினார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டும். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துவேன்.
அம்பன் புயலுக்கு 72 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளன. புயலில் சிக்கி உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.