செய்திகள்
கோமா நிலைக்கு சென்ற சத்தீஸ்கர் முன்னாள் முதல்மந்திரி
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்மந்திரி அஜித் ஜோகி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி (74). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அஜித் ஜோகி உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசக்கருவி (வெண்டிலேட்டர்) பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இருந்தது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்மந்திரி அஜித் ஜோகியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் மேலும் அவர் நினைவிழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அஜித் ஜோகியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையை கண்காணிக்க 8 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.