செய்திகள்
மும்பை பங்குச்சந்தை

12 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி... சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு

Published On 2020-03-12 10:22 GMT   |   Update On 2020-03-12 10:44 GMT
கொரோனா அச்சம், புதிய பயணத் தடைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையாக சரிந்தன.
மும்பை:

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய அம்சங்கள் கடந்த சில தினங்களாக சர்வதேச பங்குச் சந்தைகளை ஆட்டம்காணச் செய்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது, சென்செக்ஸ் 2000க்கும் அதிகமான புள்ளிகள் வரை சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் கடுமையாக வீழ்ச்சி கண்டது. பிற்பகல் நிலவரப்படி சென்செக்ஸ் 3100 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இது 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவாகும். நிப்டி 9600 புள்ளிகளுக்கு கீழே சென்றது. 

வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9590  என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது. எச்டிஎப்சி, ரிலையன்ஸ்,  ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த சரிவினால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 11.42 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 30 நாட்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது, அனைத்து சுற்றுலா விசாக்களையும் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்த அம்சங்களும் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் பங்குகள் சரிந்தன. 
Tags:    

Similar News