செய்திகள்
கைது செய்யப்பட்ட தாகீர் உசேன்

டெல்லி வன்முறை- கொலை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் கைது

Published On 2020-03-05 10:35 GMT   |   Update On 2020-03-05 12:38 GMT
டெல்லி வன்முறையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாகீர் உசேனை போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுடெல்லி:

சிஏஏ-க்கு ஆதரவாகவும், எதிராகவும் கடந்த மாதம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இதில், சந்த் பாக் பகுதியில் உளவுத்துறையின் ரகசிய அதிகாரி அங்கித் சர்மா கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாகீர் உசேன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அங்கித் சர்மாவின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு குப்பைமேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அங்கித் சர்மாவின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அவர் பல முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 



இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தாகீர் உசேனை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே தாகீர் உசேனை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கினார்.    

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டுவந்த தாகீர் உசேன் இன்று டெல்லி ரோஸ் அவன்யு நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால், இந்த வழக்கு தங்கள் நீதிமன்ற எல்லைக்கு உள்பட்டதில்லை என தெரிவித்த நீதிமன்றம் தாகீர் உசேன் சரணடைவதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த டெல்லி போலீசார் தாகீர் உசேனை கோர்ட்டில் வைத்தே கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News