செய்திகள்
ஹர்திக் படேல்

ஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-28 09:51 GMT   |   Update On 2020-02-28 09:51 GMT
படேல் இடஒதுக்கீட்டு போராட்ட வன்முறை தொடர்பான வழக்கில் ஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஹர்திக் படேல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால் ஹர்திக் படேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 

இதில் ஒரு வழக்கில் ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது. இதேபோல் தேசத்துரோக வழக்குகள் உள்ளிட்ட மேலும் சில வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார். அதன்பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய குஜராத் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், வஸ்திரபூர் போராட்ட வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி  ஹர்திக் படேல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் குஜராத் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் ஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதிவரை முன்ஜாமீன் வழங்கினர். எனவே, தேசத்துரோக வழக்கில் மார்ச் 6-ம் தேதி வரை அவரை கைது செய்ய முடியாது.

கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து ஹர்திக் படேலை காணவில்லை என்று அவரது மனைவி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News