செய்திகள்
பொதுசொத்துக்களை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

டெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Published On 2020-02-25 13:12 GMT   |   Update On 2020-02-25 13:12 GMT
டெல்லியில் சிஏஏவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.

இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறை 3-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

இந்த வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த மோதலை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
Tags:    

Similar News