செய்திகள்
நிர்பயா குற்றவாளிகளுக்கு புதிய தூக்கு தேதி கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கை டெல்லி கோர்ட் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தது.
புதுடெல்லி:
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.
இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செயயப்பட்டது.
இந்நிலையில், டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கை நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.