செய்திகள்
சரணடைந்த பயங்கரவாதிகள்

அசாமில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் 644 பயங்கரவாதிகள் போலீசில் சரண்

Published On 2020-01-23 07:40 GMT   |   Update On 2020-01-23 07:40 GMT
அசாமில் தடை செய்யப்பட்ட 8 இயக்கங்களை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் இன்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண் அடைந்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), ரப்ஹ தேசிய விடுதலை முன்னணி (ஆர்.என்.எல்.எம்.), கம்தாபூர் விடுதலை அமைப்பு (கே.எல்.ஓ.) பெங்காலி தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.பி.) உள்ளிட்ட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களை அரசு தடை செய்துள்ளது.

இந்த இயக்கங்களை சேர்ந்தவர்கள் அடிக்கடி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கைது செய்ய போலீசார் மற்றும் சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களை சரண் அடைய செய்ய அரசு சார்பில் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இதில் சமீபத்தில் என்.டி. எப்.பி. இயக்கம் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக அரசுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.



இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 8 இயக்கங்களை சேர்ந்த 644 பயங்கரவாதிகள் இன்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் போலீசில் சரண் அடைந்தனர்.

இதற்காக நடந்த நிகழ்ச்சியில் 177 பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களில் முக்கிய தலைவர்களும் அடங்குவர்.

இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர் ஜோதி மகாந்தா கூறியதாவது:-

8 பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 644 பேர் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர். இது அசாம் மாநிலத்துக்கும், போலீசாருக்கும் முக்கியமான நாள் ஆகும் என்றார். சமீப காலங்களில் அதிகமான பயங்கரவாதிகள் சரண் அடைந்த நிகழ்ச்சி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News