செய்திகள்
உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார் ஐகோர்ட்டில் மேல்முறையீடு
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு உத்தர பிரதேசத்தின் உன்னாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது.
3 மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குல்தீப் செங்காரை குற்றவாளி என தீர்ப்பளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.