செய்திகள்
நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் பதவியேற்றார்
நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே இன்று பதவியேற்றார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட, லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று பொறுப்பேற்றார்.
இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் பிபின் ராவத், பொறுப்புகளை ஒப்படைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே, 1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் தனது ராணுவ சேவையைத் தொடங்கியவர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய கடுமையான சூழ்நிலைகளில், திறம்பட பணியாற்றியவர். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனுக்கும், கிழக்குப் பகுதியில் ஒரு தரைப்படைக்கும் கட்டளை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
ராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியா-சீனா இடையிலான சுமார் 4000 கி.மீ. எல்லையை கவனிக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.